மேற்குவங்கத்தில் பணத்திற்கு பதில் வெங்காயத்தை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் அப்பகுதி வியாபாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளது. இதனால் நாடு முழுவதும் வெங்காயத்திற்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், ஓட்டல் உரிமையாளர்கள், வியாபாரிகள் என பல தரப்பினரும் கடும் நெருக்கடியில் உள்ளனர். வெங்காயத்தின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பல பகுதிகளில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ.200 வரை விற்கப்படுகிறது.
மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் அக்ஷய் தாஸ் என்பவர் சுடஹட்டா பகுதியில் கடை வைத்துள்ளார். நேற்று வழக்கம்போல் கடையைத்திறக்க சென்றபோது அவர் கடை உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். ஆனால் உள்ளே சென்று பார்த்தபோது பணம் எதுவும் கொள்ளையடிக்கப்பட வில்லை. ஆனால் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான வெங்காயம் திருடப்பட்டிருந்தது. அதோடு பூண்டு மூட்டையும் இஞ்சியும் திருடப்பட்டிருந்தது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.